Saturday, May 16, 2009

உணர்வு மிக்கவன் தமிழன்

உணர்வு மிக்கவன் தமிழன்
திரை நடிகர்களின் உண்ணாவிரதமும்
பொதுக்கூட்டமும்தான்
தமிழனின் உணர்வினை உசுப்பேற்றும்
உடனே பொங்கியெழுவான்
அதன் பின் தான்
அது காவிரிப்பிரச்சனையா
ஒக்கனேக்கல் பிரச்சனையா
இராமேஸ்வரப் பிரச்சனையா
ஈழத்தமிழனின் பிரச்சனையா என்பதையே
தெரிந்துகொள்ளும் அளவிற்கு
உணர்வு மிக்கவன் தமிழன்

அந்த பொங்கியெழும் உணர்வையும்
வந்த நடிகன் வராத நடிகனை சொந்த வெறுப்பு ஏதுமின்றி
வராத காரணத்திற்க்கே ஏசுவதிலும்
நடிகர் சங்கம் தயாரிப்பாளச்சங்கதினை ஏசுவதிலும்
மூன்று மாதங்களாய்ப்புனிதக்காதல் புரிந்து பிரிந்த
நடிகையுடன் சேர்ந்தமர்ந்த நடிகன் பேசியது
எந்த சொப்புபோட்டு குளிச்ச என்றா ?
எத்தன ரவுண்டு அடிச்ச என்றா ? என பத்திரிகைகள் நடத்தும்
பரிசுக்கேள்விக்கு பதில் எழுதுவதிலும்
நேரடி ஒளிப்பதிவிலும் அரசியல் ஆதாயம் தேடும்
நேர்மையான தொலைக்காட்சிகளில் எதை நம்புவதென்பதிலும்
குழம்பிப்போய்

எதற்கு பொங்கிஎழுந்தோம் ? என்பதையே மறந்து
கரைவேட்டியிலும் நூறு இருநூறுகளிலும் வாழ்வை மேம்படுத்த
கட்சிகளிடம் கைநீட்டியதற்கு நன்றிக்கடனாய்
வாக்கு விற்றப்பணத்தில் மண்ணைவாரித்தன் தலையில்
வைத்துக்கொண்டான் உணர்வு மிக்கத்தமிழன்

இனி தமிழன் எந்த நாட்டிலும் கொல்லப்படமாட்டான்
அடிவாங்கமாட்டான் ஏனென்றால்
இந்தியா இருக்கிறது
தமிழனுக்கு நீதிகிடைக்காத நாடுகளுக்கு
பணஉதவியும் ஆயுத உதவியும் செய்ய
இறையாண்மை மிக்க நாடு
எங்கள் இந்தியா

Saturday, May 9, 2009

தமிழனாகப்பிறந்தவன்

உண்ணா நோன்பிருந்து உலகையே குலுங்க வைக்கும் வல்லமையும் சிங்கள அரசின் ஈழத்தமிழின கருணைக்கொலைகளை தடுக்கும் ராஜத்தந்திரமும் தமிழனைத்தவிர வேறு யாருக்கு இருக்கும்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உண்ணா நோன்பும்
ஆட்சியைப்பிடிக்க தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதியும் போதாதா தமிழனின் வலிகளை ஆறச்செய்ய

விரைவில் இலங்கையில் இன விடுதலை பெறுவோம்
இங்குள்ளத்தமிழின அரசியல் தலைவர்கள் வழியில்
தேர்தல் வருகிறதல்லவா ?

தமிழனின் உயிர்களை விற்று வாக்கு வாங்கும் அரசியல் வியாபாரிகளே
இனி உங்கள் வாரிசுகள் குடிக்கும் தண்ணீரில் எங்கள் இரத்தமும் உண்ணும் உணவில் எங்கள் சதையும் கலந்திருக்கும்

வாழ்க தமிழ் நாட்டு அரசியல்
வாழ்க இந்திய ஜனநாயகம்